அதிகாலை...
எப்போதும் போலவே இப்போதும்
பூத்தது எழிலான காலை
சில்லென்றறைந்து வணக்கம் சொல்லிற்று
சாளரம்வழி நுழைந்திட்ட காற்று
வாயிலிலே சென்றுதான் பார்க்கையிலே
வண்ணமலர்கள் பூத்துச் சிரித்தது
மெதுவாய் இரண்டடி நடந்து
மேலே நிமிர்ந்து பார்க்கையில்
படபடவென்று சிறகடித்து சென்றது
பட்டுக் காகம் பணிசெய்ய
குயிலொன்று கூவுது அங்கே
களிமிகுந்து காதல் கொண்டு
பசுவைத்தேடி ஓடுது கன்று
பசியாறும் நோக்கத் தோடு
புன்னகை ஒன்று பூத்திற்று
புதிதாய் எந்தன் முகத்தினிலே
ஆதவனும் அங்கே புன்னகைக்கிறான்
அனைத்தும் சரியாய் இருப்பதுகண்டு
அடடா! எத்துனை அழகு
அழகாய் புலரும் காலைப்பொழுது